விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. நாடாளுமன்ற தேர்தல் பிரசார நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புகழேந்தி காலமானார். இதைத் தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.அதில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை 13 – ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 21-ஆம் தேதி ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அன்னியூர் சிவா தி.மு.க விவசாய அணி செயலாளராக உள்ளார்.