வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்களுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்

தென்சென்னை தொகுதியில் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. தென் சென்னை தொகுதியின் மண்டல அலுவலகத்துக்கு நேற்று காலை ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’ என்ற எம்ஜிஆர் பாடலை ஒலித்தபடி இரு சக்கர வாகனத்தில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.ஜெயராமன்(48) மேல் சட்டை அணியாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

போலீஸார் எச்சரித்ததைத் தொடர்ந்து, பாடலை நிறுத்திவிட்டு தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனுத் தாக்கல் செய்ய, டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்களுடன் சென்றார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று வேட்புமனுவை வாங்க மறுத்ததால், மனுதாக்கல் செய்யாமல் ஜெயராமன் திரும்பிச் சென்றார்.

இது தொடர்பாக ஜெயராமன் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நான் ஒரு விவசாயி. தற்போது சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறேன். இதுவரை சென்னை ஆர்.கே.நகர்,திருவாரூர், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளேன். கடந்த மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டேன்.

இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்ய வந்தேன். மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று எனது வேட்பு மனுவை வாங்காததால், நான் திரும்பி வந்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.

நாணயமாக டெபாசிட் பணம்: ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பா. ஜெயக்குமார், நேற்று டெபாசிட் தொகையான ரூ. 25ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச.அருண்ராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.