யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு  அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள கறுப்பு ஜூலை நினைவுருவ படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்ததாக, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.