கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில், கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்றைய தினம் (4) கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்தின் தற்போதைய கல்விப் போக்கையும் கல்விச் சீர்திருத்தங்களையும் கடுமையாகச் சாடினார்.

கல்விச் சீர்திருத்தங்கள், பரீட்சை முறை மாற்றம் மற்றும் புதிய கல்வித் திட்டங்கள் குறித்துக் கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் மேடைக்கு மேடைப் பேசினாலும், நடைமுறையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி வெறும் காலத்தைக் கடத்தும் தந்திரங்களையே அரசாங்கம் கையாள்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அரசாங்கம் படிப்படியாக இலவசக் கல்வியை சீரழித்து, கல்வித் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மறுபுறம் அரச பல்கலைக்கழகங்களில் கல்வித் துறையில் பட்டம் பெற்ற 40,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படாமல் வீடுகளில் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

எனவே, இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், கல்வித் துறையின் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இப்போராட்டத்தின்போது, பாடத்திட்டத் தொகுதிகள் (Modules) மற்றும் பதவி உயர்வுகளில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கக் கோரி பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, "மொடியூல்" முறையினால் பாதிக்கப்பட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாத ஆசிரியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி பதவி உயர்வுகளை வழங்கவேண்டும், அவர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் பகுதி அளவில் மொடியூல்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களை எஞ்சிய தடைகளில் இருந்து விடுவிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் 2025.06.30ஆம் திகதி வரை நிபந்தனையுடன் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முந்தைய தரநிலைத் தடைகளில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே மொடியூல்களை பூர்த்தி செய்து எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறவுள்ள ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் மதிப்பீடுகளுக்கு அல்லது பரீட்சைகளுக்கு உட்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், புதிய மொடியூல்களின் உள்ளடக்கங்களை உடனடியாக ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கல்வி அமைச்சு ஆசிரியர்களின் நியாயமான இக்கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிசாய்க்கத் தவறினால், வரும் நாட்களில் இப்போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.