அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், பில் கிளின்டன், ட்ரம்ப் உள்ளிட்டோரின் தொடர்பு அம்பலமாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற கோடீஸ்வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் திரட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2019-ல் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் விசாரணை ஆவணங்களை, அந்நாட்டு நீதித் துறை கடந்த 19-ம் தேதி முதல் வெளியிடத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆவணங்கள், எப்ஸ்டீனுக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட தொழிலதிபர்கள், பிரபலங்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியிடப்பட்ட இந்த ஆவணத் தொகுப்பில், 254 மசாஜ் செய்பவர்களின் பெயர்கள் அடங்கிய 7 பக்கங்கள் முற்றிலும் கருப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளன.
மேலும், முன்னாள் அதிபர் பில் கிளின்டன் இளமையாக இருந்தபோது ஒரு ‘ஹாட் டப்பில்’ சாய்ந்து அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அந்தப் படத்தின் ஒரு பகுதி மறைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புகைப்படம், கிளின்டன் ஒரு கருப்பு நிற முடி கொண்ட பெண்ணுடன் நீந்துவதைக் காட்டுகிறது. அந்தப் பெண் எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல் எனத் தெரிகிறது.
மேலும், இந்த ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்ட ஒரு குறிப்பில் டொனால்டு ட்ரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அந்த குறிப்பு யாருடையது என்பது தெளிவாகத் தெரியவில்லை.




