அமெரிக்கா – இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என  ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஆறு அம்சங்களை சுட்டிக்காட்டி, அலி லாரிஜானி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இக்கேள்வியை முன்வைத்துள்ளார்.

தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின்போது ஈரான் ஒரு வஞ்சனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது, நாட்டை நிலைகுலையச் செய்து, துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதலாக இருக்கிறது என கடிதத்தில் அலி லாரிஜானி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  இராணுவத் தளபதிகள், ஈரான் உயர் தலைவர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்ததாகவும் அதற்குத் தாம் பதிலடி கொடுத்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானுக்கு பெரும்பாலான இஸ்லாமிய அரசாங்கங்களிடமிருந்து ஆதரவு கிடைக்கப்பெறவில்லை என்றும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் ஆதரவுடன் சில நாடுகளே ஈரானுக்கு உதவியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஈரானை தாக்க அனுமதித்துவிட்டு, பதிலுக்கு அமெரிக்க தளங்களை தாக்கினால் எங்களை எதிரி என்பதா? ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா? நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் என்றும் இஸ்லாமிய நாடுகளை நோக்கி அக்கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.