ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார்

மியன்மார் இராணுவ அரசாங்கம் ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஆசியான் கூட்டமைப்பின் தற்போதைய தலைமை நாடான பிலிப்பைன்ஸ், ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவரையோ அல்லது பிற அரசியல் கைதிகளையோ சந்திப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பதிலளித்த மியன்மார் வெளிவிவகார அமைச்சு, “மனிதநேய அடிப்படையில் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டிருந்தாலும், அவரை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வது என்பது நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும்” எனக் கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், மியன்மார் பிரச்சினையைச் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் சிறப்புத் தூதுவர் முறை இனி தங்களுக்குத் தேவையில்லை எனவும் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

81 வயதான ஆங் சான் சூகி, 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.