இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்படுகிறாரா ஷேக் ஹசீனா?

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடதுக்கீட்டை எதிர்த்து கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

இதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமர் மாளிகையில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இன்று வரை அவர் இந்தியாவிலேயே உள்ளார். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடுகடத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.