இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் அல்லது பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் பரசாத் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் இரண்டு தாதியர்களுக்கு (ஒரு ஆண், ஒரு பெண்) கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த இருவருடன் தொடர்பில் இருந்த சுமார் 196 பேர் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை (Negative) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்த இரண்டு பாதிப்புகளிலிருந்து மேலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இத்தகைய பாதிப்புகளைக் கையாளும் திறன் இந்தியாவிற்கு உள்ளது” என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு கொடிய வைரஸ் ஆகும்.

இது முக்கியமாக ‘பழம் தின்னும் வௌவால்கள்’ மூலம் பரவுகிறது. வௌவால்கள் கடித்த பழங்களை உண்பது அல்லது அவற்றின் சிறுநீர்/எச்சம் மற்றும் பதனீர் போன்றவற்றை அருந்துவதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது எளிதில் பரவாது; பாதிக்கப்பட்டவருடன் நீண்ட நேரம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பரவும் வாய்ப்புள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் 40% முதல் 75% வரை உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ இல்லை.

இந்தியாவில் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, ஹொங்காங், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும், இது ஒரு வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வௌவால்கள் கடித்த அடையாளங்கள் உள்ள பழங்களை உண்ண வேண்டாம்.

பழங்களை நன்றாகக் கழுவி, தோலை நீக்கிய பிறகு உட்கொள்ளவும்.

காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்.