ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!

ஹோர்முஸ் ஜலசந்தி  வழியாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த ‘செலன்’  என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைவதற்குரிய முறையான அனுமதிப்பத்திரம்  இன்றி பயணிக்க முயன்றதால், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஈரானின் கடல்சார் சட்டங்களுக்கு அமுல்படாமை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கான அனுமதி இல்லாமை காரணமாக இந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு கப்பலும் ஈரானின் கடல்சார் அதிகாரசபையுடன் முழுமையான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டான்சிரி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிரி நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி (சில சந்தர்ப்பங்களில் கட்டணம் செலுத்தி) இந்த நீர்வழியைப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஈரான் எதிரியாகக் கருதும் தரப்புகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தமது கடல் எல்லையைத் தாண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.