உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணியோ குத்தேரஸ், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி என அனைத்து தலைப்புகள் தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமான தலைவராக இந்தியா மாறியுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்தபோது எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் எனக்கு இன்னமும் நிலையில் உள்ளன. துரதிருஷ்டவசமாக உலகின் பல பகுதிகளில் ஜனநாயகம் சிக்கலில் உள்ள நிலையில், ஒரு ஜனநாயக நாடாகவும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் பங்களிப்புக்காக நாங்கள் அந்த நாட்டுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக, ஐ.நா. அமைதிப் படையில் இந்தியா இருப்பதற்காக நாங்கள் மிகப் பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளோம். தற்போது உலகின் பல பகுதிகளில் அமைதிப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா. அமைதிப் படையில் 5,000 இந்திய ஆண்களும் பெண்களும் உள்ளனர்.
பாலின சமத்துவம் என்பது ஐ.நா.வின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்துக்கு இணங்க, இந்தியா முற்றிலும் பெண் காவலர்கள் அடங்கிய அமைதிப் படை ஒன்றை இந்தியா வழங்கியது. கடந்த 2007-ல் இந்த படை லைபீரியாவில் தனது பணிகளைச் சிறப்பாக செய்தது. இவ்வாறு முழு அளவில் பெண்கள் படையை அனுப்பிய முதல் நாடு இந்தியா. இது ஐ.நா. வரலாற்றில் ஒரு மைல்கல். சர்வதேச சமூகத்துக்கான ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் இந்த நிரந்தர பங்களிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நிச்சயமாக உலகில் கவலைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகில் மோதல்கள் பெருகுவதையும், அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதையும், பசி தீர்க்கப்படாமல் உள்ளதையும் நாம் பார்க்கிறோம். உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது. எனவே, கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், சில நேர்மறையான சில மிகப் பெரிய போக்குகளும் உள்ளன.
இந்த மிக முக்கியமான மெகா போக்குகளில் ஒன்று இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் தொடர்பானது. வளர்ந்த ஜி7 நாடுகளும் அதைப் போன்ற சில நாடுகளும், பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளுக்கு அடிப்படைத் தூணாக இருக்கும் இந்தியாவும், ஒவ்வொரு நாளும் உலக பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இது ஒரு மெகா போக்கு. காலப்போக்கில் நீதி, சமத்துவம், அமைதி ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க இது உதவும்.
ஐ.நா பொது அவையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அனைத்து நாடுகளுக்கும் ஒரே மதிப்பு அங்கு அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் அமைப்பிலும் செயல்பாட்டிலும் நியாயமற்று இருப்பது உண்மை. ஐ.நா. சபையை எளிதாக விமர்சிக்க இது காரணமாக இருக்கிறது.
எனினும், ஐ.நா. பெருமைப்படத்தக்க வகையில் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது. உலகம் முழுவதும் மனிதாபிமான உதவிகள், நிலையான வளர்ச்சிக்கான ஆதரவு, காலநிலை நடவடிக்கைகளுக்கான பிரச்சாரத்தை வழிநடத்துதல் ஆகியவற்றில் ஐ.நா செய்து வரும் அசாதாரணப் பணிகளை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.



