உலக அளவில் முன்னிலை: வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது. அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா வெளிநாடுகளிலிருந்து வரும் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் தருவது இசிஏ மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சவுதி அரேபியாவில் நடுத்தர அளவில் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,763 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.88.64 லட்சம் ஆகும். உலகிலேயே இப்பணிக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சம்பளம் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும் உலகளவில் இதுவே அதிகபட்சம்.