கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அவரது காதலனை, சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ காவல் துறையினர் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கனடாவின் டொராண்டோவில் வசித்து வந்த 30 வயதான இமான்ஷி குரானா என்ற இந்தியப் பெண், கடந்த 2025 டிசம்பர் 19 இரவில் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, காவல் துறை அவரைத் தீவிரமாகத் தேடத் தொடங்கியது.மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இமான்ஷி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில் இமான்ஷியின் காதலனான அப்துல் கபூரி (32) இக்கொலையைச் செய்தது தெரியவரவே, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவத்துக்குக் கடும் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்த டொராண்டோ இந்தியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கியது. இந்நிலையில் வெளிநாட்டில் ஒளிந்திருந்த அப்துல் கபூரியை சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் கண்டறிந்த டொராண்டோ சிறப்புக் காவல் படையினர், இரு தினங்களுக்கு முன் அவர் டொராண்டோ விமான நிலையம் வந்தடைந்ததும் கைது செய்தனர்.





