காசா போர்நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் – இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி !

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பிடம் சுமார் 20 பிணைக் கைதிகள் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில், 7 பிணைக் கைதிகளை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை (13) விடுவித்துள்ளது.

இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.

இந்தக் பிணைக்கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.