மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் பங்கேற்று பேசியதாவது: காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தை இந்தியா கவனத்தில் கொள்கிறது.
இந்த நீண்டகால போருக்கு தீர்வு காண்பதற்காக அமெரிக்காவுக்கு இந்தியா பாராட்டு தெரிவிக்கிறது. காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் விரிவான திட்டத்துக்கு பாதுகாப்பு கவுன்சில் கடந்த நவம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது.
காசா அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத தீவிரவாதமற்ற பகுதியாக இருக்கும் என்றும் காசா மக்களின் நலனுக்காக அவர்களின் பகுதி மறு மேம்பாடு செய்யப்படும் என்றும் அத்திட்டம் கூறுகிறது. காசாவுக்கு மனிதாபிமான உதவியாக கடந்த 2 ஆண்டுகளில் 135 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இவ்வாறு ஹரீஷ் கூறினார்.





