போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது அமெரிக்கா

கரீபியனில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு போட்டு அழித்ததாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது:

அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பல் அழிக்கப்பட்டுள்ளது. எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். இந்தக் கப்பலில் பெரும்பாலும் பெண்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருள்கள் இருந்ததை அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஈக்வடார் மற்றும் கொலம்பியாவிற்கு விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

“இந்தப் போதைப்பொருள் நீர்மூழ்கிக் கப்பல் மட்டும் அமெரிக்காவுக்குள் வந்திருந்தால், 25,000 அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கரீபியனில் போதைப்பொருள் கடத்திவரும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய 6-வது தாக்குதல் இதுவாகும். கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

“கொலம்பியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டப்படி அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்றார்