லண்டனில் ரூ.1,200 கோடிக்கு மாளிகை வாங்கிய இந்தியர்

இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப ஆண்டுகளில், லண்டனில் மிகப் பெரும் தொகையில் வாங்கப்பட்ட மாளிகையாக இது பார்க்கப்படுகிறது.

லண்டனில் 150 பார்க் சாலையில் ஹனோவர் லாட்ஜ் மாளிகை அமைந்துள்ளது. 1827-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. லண்டனில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாளிகையை ரஷ்யரான ஆன்டிரி கோஞ்சரென்கோ 2012-ம் ஆண்டில் 120 மில்லியன் பவுண்டுக்கு வாங்கினார். இவர் ரஷ்ய அரசு நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வென்ஸ்ட் யூக் நிறுவன முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி.

அவரிடம் இருந்து இந்த மாளிகையை இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா வாங்கியுள்ளார். ரவி ரூயா முதலீட்டு நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
லண்டனில் பிரம்மாண்ட சொகுசு வீடுகளுக்கான சந்தை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் 30 மில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களில் 17 சதவீதம் பேர் சொகுசு வீடுகளை வாங்கியுள்ளதாக நைட் பிராங்க் அமைப்பு தெரிவித் துள்ளது.