பாலமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில், கைவிடப்பட்ட கிணறு ஒன்றிற்குள் யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (19) மாலை வேளையில் கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்றபோதே, கிணற்றுக்குள் யானை விழுந்து உயிருடன் போராடிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கிராம மக்களால் உடனடியாக இது குறித்து பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார், கிராம மக்களின் உதவியுடன் கிணற்றுக்குள் சிக்கியுள்ள யானையை பாதுகாப்பாக மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.