மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் அத்துமீறி காடுகளை வெட்டி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பண்ணையாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையில் நிலைமை மோசமடைந்துள்ளது என சிவில் செயற்பாட்டாளர் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,
பண்ணையாளர்களின் இருப்பிடங்களுக்கு கத்திகளுடன் சென்ற சில சிங்களவர்கள் பண்ணையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியுள்ளனர். இதனால் செய்வதறியாது அச்சமான சூழ்நிலையில் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்களது நிலமை மோசமடைந்துள்ளது.
கடந்த 1020 ஆவது நாளாக தொடர்ந்து தமது மேய்ச்சல் தரைக்காக அறவழி போராட்டத்தினை நடாத்தி வரும் சூழலில் இதுபோன்ற துன்பகரமான விடயங்கள் பண்ணையாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றதன் காரணத்தினால் பண்ணையாளர்கள் சார்பில் வழக்குகள் போடப்பட்டு குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு நீதிமன்றம் மூலம் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
ஆனாலும் அவர்களில் சிலர் வெளியேற்றாமல் நீதிமன்ற உத்தரவை மீறி குடியிருந்த நிலையில், அப்பகுதிகளில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கென்று பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பண்ணையாளர்கள் செல்லும்போது ஒவ்வொருவராக ஆள் அடையாள பரிசோதனை செய்யும் பொலிஸார் மேற்படி அத்துமீறி பிரவேசிக்கும் சிங்களவர்கள் தொடர்பில் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை என பண்ணையாளர்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கின்றனர்.
சென்றவாரம் வாரமும் இதேபோல் சில சிங்களவர்களுடன் கால்நடை பண்ணையாளர்கள் இருப்பிடங்களுக்குச் சென்ற பொலிஸார் அந்த இடத்திலிருந்து பண்ணையாளர்கள் வெளியேற வேண்டும் என்ற அழுத்தத்தினை பிரயோகித்திருந்தனர்.
பண்ணையாளர்கள் மற்றும் அவர்களது கால்நடைகளுக்கு பாதுகாப்பு என்ற காரணத்திற்காகத் தான் மேற்படி பொலிஸ் சோதனைச் சாவடி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று பொலிஸாரின் கண்காணிப்பிற்கு மத்தியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் காடுகளை அழித்து புற்தரைகளைச் சேதப்படுத்தி தீவைத்து அழித்து நாசமாக்கி சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குடிசைகளை அமைத்து வருகின்றனர்.
இவை எல்லாம் அரச திணைக்களங்களான மாகாவலி திணைக்களம், வன இலாக திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் மற்றும் பல திணைக்களங்கள் அதிகாரிகள் இருந்தும் இதை ஏன் தடுக்க முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.