அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பகைத்துக்கொள்ளும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது. ஆகவே ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை அரசாங்கம் கொள்வனவு செய்யாது. எதிர்வரும் காலங்களில் வலுசக்தி துறை மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

புத்தாண்டு நாட்டு மக்களுக்கு சுபமானதாக அமையாது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை குறிப்பிட்டுக் கொண்டு எரிபொருள் விலை  அதிகரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது மின்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வுக்காக மின்சார சபை முன்வைத்த தரவுகளில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்த கருத்து கோரல் நிகழ்வுகளில் இவற்றை வெளிப்படுத்தினோம்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி மற்றும் தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மீண்டும் மின்கட்டணம் உயர்வடையும் சாத்தியம் காணப்பகிறது.

நீர் மின் உற்பத்தியை குறைத்து எரிபொருள் மற்றும் நிலக்கரி ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காகவே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கான விலைமனு கோரல்கள் அரசாங்கத்துக்கு இணக்கமான தரப்பினருக்கே வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. எதிர்காலத்தில் வலுசக்தி துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்றார்.