மக்களின் வரிச் சுமையை குறைப்பதாகக் கூறிவிட்டு, வரியை 500 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல செவ்வாய்க்கிழமை (06) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகப்படியான வரிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்குவதாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், அரசாங்கம் பதவியேற்று இதுவரையில் இரண்டு வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்துள்ள போதிலும், வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதிய வரிகளை விதிக்கப் போவதில்லை எனக் கூறிவிட்டு, தற்போது கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை (வரிப்பணம்) பாரியளவில் அதிகரித்துள்ளது.
இதன்படி, தலதா வீதி மற்றும் அம்பிட்டிய பகுதிகளில் ஒரு காலாண்டுக்கு 1400 ரூபாவாக இருந்த வரிப்பணம் தற்போது 6630 ரூபாவாக 500 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஹேவாஹெட்ட பகுதியில் 1800 ரூபாவாக இருந்த வரி 7000 ரூபாவாகவும், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வர்த்தக கட்டடங்களுக்கான வரி 200 சதவீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளியினால் கண்டி மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இவ்வாறானதொரு அனர்த்த நிலையிலிருந்து மீண்டெழும் மக்கள் மீது இவ்வளவு பெரிய வரிச் சுமையை சுமத்துவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கண்டி நகரை சுத்தமாக வைத்திருப்பதற்காக நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கவில்லை. எவ்வாறாயினும் அவர்களுக்குப் பொருத்தமான மாற்று இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.
தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு நுகர்வோர் வருவதில்லை என்பதால், நகரின் உட்புற வீதிகளிலாவது அவர்களுக்கு வியாபாரம் செய்ய இடமளிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 6ஆம் தரப் பாடப்புத்தகத் தொகுதி (Module) தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்துப் பேசுகையில், கல்வித் துறையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்பதில்லை.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்தத் தொகுதி அச்சிடுதல் போன்ற அனைத்தையும் தற்போதைய அரசாங்கமே மேற்கொண்டது. ஆனால், இன்று அந்தத் தவறை அதிகாரிகளின் மீது சுமத்த அரசாங்கம் முயல்கிறது.
இந்த விடயத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமானால், பிரதமர் மற்றும் கல்விச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புதாரிகள் பதவி விலக வேண்டும்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25,000 ரூபா இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் கூறிய போதிலும், கண்டி மாவட்டத்தில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே அந்த நிதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், பாடசாலை உபகரணங்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவும் பல மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இறுதியாக, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அடிமட்டத் தொண்டர்கள் இந்த இணைவை விரும்புவதாகவும், அதன் தலைமைத்துவம் சஜித் பிரேமதாசவுக்கே வழங்கப்பட வேண்டும். என்பது பலரின் கருத்தாகும். நாடாளுமன்றத்திலும் அடிமட்டத்திலும் மக்கள் ஆணை சஜித் பிரேமதாசவுக்கே உள்ளது.
அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளையும் முன்னின்று செய்து வருகிறார். ஹரின் பெர்னாண்டோ போன்றவர்களும் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர் நாட்டை வழிநடத்தக்கூடிய பலமான தலைவர் என்றார்.
வரியை குறைப்பதாகக் கூறிவிட்டு, 500 சதவீதத்தால் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது - சமிந்திரானி கிரியெல்ல
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space