சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 33 வயதுடைய கொழும்பைச் சேர்ந்த ஒருவரும், கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றும் ஒரு பெண் உட்பட மூன்று சீனப் பிரஜைகளும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று அதிகாலை 12.10 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான நுமு-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'மென்செஸ்டர்' ரகத்தைச் சேர்ந்த 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 கார்ட்டூன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.