அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அம்பலங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவல்களின் படி, அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு (CCTV) காட்சிகளில் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக் கொண்டிருக்கும் நபர் இவரே என நம்பப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு நபர்களும், அவர்களை தங்கியிருந்த விடுதிக்கு கொண்டு சென்ற வாகன சாரதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், குற்றத்திற்கு முன்னர் துப்பாக்கிதாரிகளை தங்கியிருந்த விடுதிக்கு கொண்டு சென்ற வாகனத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் உரிமையாளர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்தில் ரிவால்வர் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், ரூக்ககஹவிலா, மீவல, பன்சல வீதியைச் சேர்ந்த ரொபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்ய விரிவான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 13 ஆம் திகதி, தலங்கம, அக்குரேகொடா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், சட்டத்தரணி புத்திக்க மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டன.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிதாரிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரர்கள் பெப்ரவரி 16 ஆம் திகதி கொட்டாவ பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் “டிலா” என அழைக்கப்படும் மற்றொரு சந்தேகநபர் பொல்கசோவிற்ற பகுதியில் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த இரு சகோதரர்களும் “டிலா” என அழைக்கப்படும் நபரின் உத்தரவின் பேரிலேயே ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




