அரசாங்கத்தினால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க முடியும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்கனவே தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பயிற்சி பெற்ற வைத்தியர்களுக்கான நியமனம் தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பதவி நியமனங்களுக்காக தகுதியுள்ள 453 வைத்தியர்களில் 435 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான பெயர்ப் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதோடு, அது விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.
சித்திரை புத்தாண்டிற்கு முன்னதாக இந்த வைத்தியர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





