முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டடத்திலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்த கைதி, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
கைதி கட்டடத்திலிருந்து விழுந்ததற்கான சூழ்நிலைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
2022 மே 9ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதிப் போராட்ட காலத்தில், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகிய இருவரும் நிட்டம்புவ நகரில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
அமரகீர்த்தி அத்துகோரல கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக 12 நபர்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களுக்கு இந்த ஆண்டு கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரே வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




