அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட் கைது

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சமூக ஊடக பிரபலங்களான அண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் மியாமி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய  அரச குற்றவியல் வழக்குத் தொடரல் திணைக்களம் அவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட 38 புதிய கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்கா இந்த நாடுகடத்தல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சகோதரர்கள் இருவர் மீதும் பிரித்தானியாவில் மொத்தம் 59 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

38 வயதுடைய டிரிஸ்டன் டேட் மீதான 17 குற்றச்சாட்டுகளில் 2 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு, பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தலை எளிதாக்கிய 3 குற்றச்சாட்டுகள் ஆகியன சில குற்றச்சாட்டுகளாகும்.

இந்த சட்டவிரோதச் செயல்கள் அனைத்தும் ஜூலை  2010 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்க இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவின் லண்டனுக்கு வடக்கே உள்ள பகுதியில் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட இந்த சகோதரர்கள், கடந்த 2016 இல் ரோமேனியாவுக்குக் குடிபெயர்ந்தனர். ரோமேனியாவிலும் மனித கடத்தல் வழக்குகளை எதிர்கொண்ட இவர்கள், அண்மையில் விசேட விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவுக்குச் சென்றிருந்தனர்.  இந்நிலையில், பித்தானியாவின் அவசர நாடுகடத்தல் கோரிக்கையின் பேரில், மியாமியில் வைத்து இருவரும் சீல் வைக்கப்பட்ட பிடியாணை மூலம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் மியாமி மத்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

டேட் சகோதரர்களின் அமெரிக்க சட்டதரணியான ஜோசப் மெக்பிரைட் இந்தக் கைதுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

“ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் இருவரும் நிரபராதிகள் என்பது இந்த உலகிற்குத் தெரியும். அவர்களின் எதிரிகளுக்கும் அது தெரியும், அதனால்தான் அவர்கள் இவ்வாறு தாக்கப்படுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்காவில் டேட் சகோதரர்கள் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்குகளை முடக்குவதற்காக பிரித்தானியா  தொடுத்துள்ள “அரசியல் ரீதியிலான தாக்குதல்” எனவும், அமெரிக்கா பிரித்தானியாவின் அழுக்கடைந்த அரசியல் வேலைகளுக்குப் பயன்படக் கூடாது எனவும் அவர் வாதிட்டுள்ளார்.