அமைச்சர்கள் திசைமாறி செயற்படுவதால் ஜனாதிபதியே தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றார் – அசேல சம்பத்

அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவின் வர்த்தக வளர்ச்சிக்குக் பின்னால் உள்ள அரசியல் சலுகைகள் மற்றும் துறைமுக அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

டட்லி சிறிசேன இன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் பயணிக்கும் நிலைக்கு உயர்ந்ததன் பின்னணியில் சாதாரண மக்களின் வரிப்பணமும், அரச வங்கிகளின் சலுகைகளும் உள்ளன.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முதல் அவரது சகோதரரின் ஜனாதிபதி காலம் வரை, அரச வங்கிகள் ஊடாக அவருக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன் வசதிகள் மற்றும் சலுகைகள் எவை என்பதை நாங்கள் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்.

ஒரு சாதாரண மனிதன் வங்கியில் கடன் பெற முடியாமல் தவிக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் பெற்ற வரப்பிரசாதங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேலும் தற்போது ரமலான் நோன்பு காலம் ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்து வரும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியிலும் நுகர்வோர் பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

துறைமுகங்களில் கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதால் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர குமார கருணாத்திலக்க, யாழ்ப்பாணத்திற்குச் சென்று கல்வி சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுவது வேடிக்கையானது. ஜனாதிபதி வழங்கிய பொறுப்பைச் செய்யாமல் தேவையற்ற விடயங்களில் அமைச்சர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

இறுதியாக, தமக்கு வழங்கப்பட்ட விடயதானங்களை விடுத்து வேறு பாதைகளில் அமைச்சர்கள் பயணிப்பதால் ஜனாதிபதியே தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றார். மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கமே உடனடியாக முன்வர வேண்டும் என்றார்.