அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட புஜ்ஜோமுவ பாலத்தை நிரந்தரமாகப் பொருத்தும் பணிகள் காரணமாக ஏப்ரல் 1 முதல் 5ஆம் திகதி வரை குறித்த பகுதியில் ரயில் போக்குவரத்து ஒரு தடத்தின் ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த கால “டித்வா” சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக இப்பகுதியில் இருந்த பழைய செங்கல் வளைவுப் பாலம் உடைந்து சுமார் 45 அடி ஆழமான பள்ளம் உருவானது.
இதனால் இதுவரை தற்காலிகப் பாலம் மூலம் மணித்தியாலத்துக்கு 10 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அதனை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
1. சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் (ஏப்ரல் 01, 02, 03 மற்றும் 04):
பின்வரும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கணை வரை செல்லாது, அம்பேபுஸ்ஸ வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் இலக்கம் 125: கோட்டை – ரம்புக்கணை (அதிகாலை 4.25 மணி)
ரயில் இலக்கம் 170: கோட்டை – ரம்புக்கணை (மாலை 3.45 மணி)
2. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில் (ஏப்ரல் 2ஆம் திகதி மாத்திரம்):
ரயில் இலக்கம் 168: கோட்டை – ரம்புக்கணை (மாலை 5 மணி)
ரயில் இலக்கம் 585: ரம்புக்கணை – கோட்டை (இரவு 8.05 மணி)
இந்தக் காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கணை, மஹவ, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் ரயில் தாமதமடையக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்குத் திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.



