இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர்.
இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




