இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ அறிக்கை வெளியீடு !

இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கு தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியைக் குறைப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதும் மிக முக்கியமானது என ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிறிஸ்டின் அரப்  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை (மார்ச் 25–26) மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின்  ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிறிஸ்டின் அரப் , நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மூலோபாய முதலீடுகளுக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ விபரத்திரட்டை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை மனித மேம்பாட்டு மட்டத்தில் உயர் நிலையில் இருந்தபோதிலும், பாலின சமத்துவத்தில் பாரிய சரிவைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 16வது இடத்தில் இருந்த இலங்கை, 2025ஆம் ஆண்டளவில் 130வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் 100 இடங்களுக்கும் மேலாக இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விரிவான ஆய்வறிக்கையில், பெண்களின் பொருளாதார மற்றும் அரசியல் பங்களிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை தொடர்பான தரவுகள், பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள், சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்புகளில் உள்ள பாரபட்சங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தனது விஜயத்தின் போது, பணிப்பாளர் கிறிஸ்டின் அரப், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜை சந்தித்து, கொள்கை சீர்திருத்தம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்து கலந்துரையாடினார்.

மேலும், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் தூதுரக அதிகாரிகளையும், இலங்கையின் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் (NCW) உறுப்பினர்களையும் அவர் சந்தித்தார். இதன்போது, “பெண்களுக்கு முதலீடு செய்வது என்பது வெறும் உரிமைகள் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி” என அவர் குறிப்பிட்டார்.

சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பில், புதுமையான சமூக மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் (FISD) நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சமிதா சுகத்திமால கருத்துத் தெரிவிக்கையில், “சிவில் சமூக அமைப்புகளுக்கான இடைவெளி குறைந்து வருவது சவாலானது. ஒதுக்கப்பட்டவர்களின் குரல்களை வலுப்படுத்த கூட்டுச் செயல்பாடு அவசியம்” எனத் தெரிவித்தார்.

ஐ.நா.வின் முன்னாள் உதவிப் பொதுச்செயலாளர் கலாநிதி ராதிகா குமாரசுவாமி இந்த நிகழ்வில் முதன்மை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி பத்மா குணரத்ன குறிப்பிடுகையில், பெண்கள் ஆணைக்குழுவானது சுயாதீனமாகவும் போதிய வளங்களுடனும் இயங்குவதை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கூறினார்.

இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என இந்தப் பயணத்தின் இறுதியில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.