இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி பெறவேண்டும்: ஜேர்மனி அதிரடி உத்தரவு

ஜேர்மனியில், 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள், இனி ஜேர்மனியிலிருந்து வெளியேறவேண்டுமானால், அதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றாகவேண்டும்.

17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஜேர்மன் ஆண்கள், கல்விக்காகவோ, பணிக்காகவோ அல்லது நீண்ட கால பயணத்துக்காகவோ வெளிநாடு செல்லவேண்டுமானால், இனி அதற்காக அரசிடம் அனுமதி பெறவேண்டும்.

இந்த விதி, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர், போர் முதலான அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே இத்தகைய அனுமதி பெறும் நிலை இருந்த நிலையில், தற்போது, இந்த விதி சட்டத்தில் ஒரு நிரந்தர அம்சமாகியுள்ளது. விடயம் என்னவென்றால், அமைதியாக, பெருமளவில் கவனம் ஈர்க்காமலே இந்த விடயம் ராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தில் ஒரு அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் முதல், தற்போதைய ஈரான் போர் வரை உலக நாடுகள் சிலவற்றில் போர்ச்சூழல் நிலவும் நிலையில், அமெரிக்கா உதவாது என தெரியவந்ததிலிருந்து ஜேர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவத்தை பலப்படுத்திவருகின்றன.

விடயம் என்னவென்றால், தற்போது 184,000ஆக இருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 255,000ஆகவும், 2035வாக்கில் 270,000ஆகவும் உயர்த்த ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், திடீரென, 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஜேர்மன் ஆண்கள் வெளிநாடு செல்லவேண்டுமானால் அதற்காக அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்னும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி பெறவேண்டும்: ஜேர்மனி அதிரடி உத்தரவு | Germany Introduces New Travel Restrictions