ஈரான் ஆன்மீகத் தலைவர் மறைவு: தூதரகத்தில் சிறிலங்கா அரசாங்கம் இரங்கல் பதிவு!

ஈரான் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் எமது அனுதாபத்தை ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் பதிவிடுகிறோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஈரானின் ஆன்மிக தலைவரின் மரணம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவலை தெரிவிக்காமல் இருப்பது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (04) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி. குறிப்பிடுகையில், சர்வதேச சட்டங்களை மீறி எமது நற்பு நாடான ஈரான் நாட்டின் ஆன்மிக தலைவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.அவரது மரணம் தொடர்பில் அரசாங்கத்தின் கண்டம் அல்லது அனுதாபம் இதுவரை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. அதனால் இதுதொடர்பில் அரசாங்க்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள் என்றார்.

அதற்கு வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

அதுதொடர்பில் எமது நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதேநேரம் இன்று (நேற்று) மாலை 1.30 மணிக்கு ஈரான் தூதரகத்துக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்தில் எனது அனுதாபத்தை பதிவிடுகிறேன். நாடு சார்ப்பாக நான் அந்த அறிவிப்பை மேற்கொள்கிறேன்.நாங்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை செய்து முடித்திருக்கிறோம்.

அதனால் உங்களுக்கு தேவையான விடயத்தை நான் செய்வதில்லை. நாட்டுக்கு தேவையான விடயங்களையே செய்கிறேன் என்றார்.

அதன்போது ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட எதிர்க்கட்சியில் இருந்த சிலர் கூச்சலிட்டு, உங்களால் பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. நீங்கள் அச்சப்படுகிறீர்கள். இதுதொடர்பில் வெட்கப்படுகிறோம் என்றனர்.