எபொல்லா வைரஸ் தொற்று ; விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்து

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று காரணமாக, சர்வதேச அவசர நிலைக்குத் தயாராக வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளதுக்கு அமைவாக நாட்டுக்கு வருகைத்தரும் பயணிகளை மருத்துவப்பரி சோதனைகளுக்கு உட்படுத்துவது அவசியம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமில் சஞ்சீவ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளான கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் தற்போது வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன்  செயற்படுவது அவசியம். இந்த நோய் ஆப்பிரிக்க பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளுக்கு வேகமாகப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும்  சுகாதார ஸ்தாபணம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்நா நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்நாட்டுப் பிரஜைகளை விமான நிலையத்தில் வைத்து முறையான கண்காணிப்புக்கும்  மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும். உங்களது உறவினர்களோ அல்லது நண்பர்களோ இந்த நாடுகளிலிருந்து இலங்கை திரும்பியிருந்து, அவர்களுக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படின், உடனடியாக முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்ததொற்றுக்கு  இதுவரை நிலையான மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால், உலக சுகாதார ஸ்தாபனம் இதன் பரவல் குறித்து தீவிர அவதானம் செலுத்தி வருகின்றது.

கடந்த காலங்களில்  எபோலா வைரஸ் உலகளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும், தற்போதைய வைரஸ் பரவலானது கோவிட்-19   வைரஸ் போன்றதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறெனினும்  நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்நாடுகளில்  இருந்து வருபவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகள் விமான நிலையங்களில் முறையான பரிசோதனை, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.