இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் அடுத்த வாரத்தொடக்கத்தில் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு என்பது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்வதுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், மனித உரிமைகள், ஆட்சியியல் நிர்வாகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பன தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடும் ஒரு கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் சந்திப்பின்போது குறிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் மீளாய்வு செய்யப்படும்.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு கடந்த 2024 பெப்ரவரி மாதம் ப்ருசேல்ஸில் நடைபெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டு அதனை கொழும்பில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைய மேற்படி கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் பங்கேற்பதற்காக கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகைதரவிருந்தனர்.
இருப்பினும் கடந்த நவம்பர் மாத இறுதியில் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, கூட்டு ஆணைக்குழு சந்திப்பைப் பிற்போடுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அச்சந்திப்பு பிற்போடப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் வாரம் திங்கட்கிழமை (9) அல்லது செவ்வாய்க்கிழமை (10) நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், சில தினங்கள் வரை நாட்டில் தங்கியிருந்து பல்தரப்பு சந்திப்புக்களிலும், மீளாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், தொழிற்சங்கவாதிகள், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தவுள்ளனர்.
இச்சந்திப்புக்களின்போது விசேடமாக பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படாமை மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு என்பன தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





