போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டு பெற்று, அதன் ஊடாக இலங்கைக்கு வருகை தர முயன்ற 48 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்த இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார்.
இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் இந்திய கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 02ஆம் திகதி குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கைக்கு வருகை தர முயன்றபோது, வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்திய மத்திய குற்றப்பிரிவின் கடவுச்சீட்டு மோசடி தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்சாட்டில் மற்றொரு இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




