கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை ; மக்களே கவனமாக இருங்கள்!

நாட்டில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று புதன்கிழமை (15) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மாத்தறை,  அம்பாந்தோட்டை, குருநாகல், அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் கடும் மின்னல்,  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.

திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

• இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• துவிச்சக்கர வண்டிகள், உழவு யந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

•அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.