கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த டிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் எனும் 35 வயதுடையவரே பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த டிப்பர், உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடிய சமயத்தில் டிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் டிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிசிரிவி காட்சிகளும் அவ்வாறே பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது டிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவித்தவர் எனவும் அத்தோடு 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.




