காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கத்தி குத்து தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவின் காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான இன்று காலையில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு உள் நுழைந்த இளைஞன் ஒருவர் குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கைகலப்பு ஆகியன இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




