கொலன்னாவை முனையத்தில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

எரிபொருள் இன்று சனிக்கிழமை (21) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் (22) விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த போதிலும், இன்று கொலன்னாவை முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை கொலன்னாவை முனையத்திற்குச் சென்ற எரிபொருள் பவுசர்கள், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார, நேற்று (20) தெரிவிக்கையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைபோல் செயற்படுத்தப்படும் என்றார்.

அதன்படி, எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் கொலன்னாவை முனையத்திற்கு சென்ற பவுசர்கள் இன்று எரிபொருள் இன்றித் திரும்பியுள்ளன.