கொழும்பு துறைமுக நகர கடற்பரப்பில் மிதந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த இளைஞர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இளைஞர், எவ்வாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கடலில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானாரா? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்ததா? என்பது குறித்து மர்மம் நீடிக்கின்றது.கடலில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு துறைமுகப் பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இசை நிகழ்ச்சிக்கு வந்த நண்பர்கள் அல்லது அங்கிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகள் மூலம் மேலதிக தகவல்களைப் பெறப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





