முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாது,மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் வலுசக்தி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளன.
மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 8 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில், மீண்டும் அக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், அவற்றை பெற்றுக்கொள்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர ஊழியர்களுக்கு வேறு வழியில்லை என தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சார சபையின் சேவையாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் போது பல கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். ஆனால் அந்த கோரிக்கைகள் ஏதும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாது மின்சார சபையை மறுசீரமைக்கும் வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் முன்னறிவித்தல் இல்லாமல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.





