சிறிலங்கா காவல் துறை அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில்  பொலிஸ்மா அதிபரிடம்  நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு  071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118  என்ற துரித இலக்கம் ஊடாக  முறைப்பாடுகளை நேரடியாக  அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற  அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற   அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  தேசிய  மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் தற்போது 608 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில்  சாதாரண சேவையில் 71,424 உத்தியோகத்தர்கள்,  7,256 விசேட அதிரடிப்படையினர்,  ஆதரவு சேவையில் 1,032 உத்தியோகத்தர்கள், உப சேவை அடிப்படையில் 70 உத்தியோகத்தர்கள்,  என்ற அடிப்படையில்  மொத்தமாக 79,782 பேர் சேவை புரிகிறார்கள்.

பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அரசாங்க  சேவை ஆணைக்குழுவின் ஆட்சேர்ப்பு  மற்றும் பதவி உயர்வு  நடைமுறை  விதிகள் மற்றும் தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவின்  வழிகாட்டல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட  ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பதவி உயர்வுகள் செய்யப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட  22 துப்பாக்கிதாரிகள், 14 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்,கூர்மையான ஆயுதத் தாக்குதல்கள் அல்லது ஏனைய தாக்குதல்களில்  தொடர்புடைய 50 பேர், குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்த 142 பேர்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 57 பேர், துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த  22 பேர், ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்ட 08 பேர் என்ற அடிப்படையில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்  திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள் இனங்காணப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபட வழிவகுக்கும் சூழ்நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை அடையாளம் காண்பதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளத. அதன்பிரகாரம் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும்,அத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உகந்த மட்டத்துக்கு  அதிகரிப்பதற்கும்,நலன்புரி  வசதிகளை மேம்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்  அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்புடனும் , நேர்மையுடனும் விசாரணைகளை மேற்கொள்வாற்கும் அவர்களுக்கு  பதவி உயர்வு  மற்றும் சம்பள  அதிகரிப்பும்  வழங்கப்படும்.

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில்   பொலிஸ் மா அதிபரிடம்  நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு  0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118  என்ற துரித இலக்கம் ஊடாக  முறைப்பாடுகளை நேரடியாக  அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார்.