சிறுவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாவதைத் தடுக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இது குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

சிறுவர்களுக்கு முடிந்தவரை அதிகளவு நீர் மற்றும் இயற்கை பானங்களை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

அதிக வெயிலில் விளையாடுவதையோ அல்லது வெளியில் செல்வதையோ தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதிகப்படியான தூக்க உணர்வு, உணவில் விருப்பமின்மை (பசியின்மை), உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அதிக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்பம் காரணமாக படர் தாமரை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.

சிறுவர்களை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பாட்ட வேண்டும் எனுவும் சுமார் 20 நிமிடங்கள் வரை அவர்களை நீரில் இருக்க அனுமதிப்பது தோல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகாவிட்டால், அவர்களுக்கு நீரிழப்பு மாத்திரமன்றி ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.