பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமாக சொட்டகண் துப்பாக்கி ரவைகளை எடுத்துச் சென்ற 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கைது செய்ததுடன், 8 ரவைகள், 20 வெற்று ரவைகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்றிரவு அட்டாளைச்சேனை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அங்கு சென்ற கார் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கிருந்து 8 சொட்டகண் ரவைகள் மற்றும் 20 வெற்று ரவைகளை மீட்டதுடன் பாணமை பிரதேசத்தைச் சோந்த 3 பேரை கைது செய்தனர். இவர்கள் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை எடுத்துச் சென்றதாக அதிரடிப்படையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்றுப் பொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





