ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய போது, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை சட்டப்பூர்வமான கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சத்தோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.