இரு கட்சிகளினதும் சார்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்குமென இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிலிருந்து அறுவரும் என மொத்தமாக 9 பேரடங்கிய இணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றன.
அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று சனிக்கிழமை மு.ப 10.00 – பி.ப 12.30 மணி வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரட்ணலிங்கம், ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு இணைக்குழுவை நியமிப்பதற்கு ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், வேந்தன், சந்திரகுமார் மற்றும் இரட்ணலிங்கம் ஆகிய அறுவரும் என மொத்தமாக ஒன்பது பேர் அங்கம் வகிக்கும் இக்குழுவுக்கு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவர்.
அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதுடன், அதில் இரு கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து தாமதப்படுத்தி, ‘பிரஜாசக்தி’ எனும் முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துவருவது பற்றியும், இத்தகைய பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாட்டின் சமகால அரசியல் மற்றும் பூகோள அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது.




