தெரணியகலை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெரணியகலை பகுதியில் போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையிடலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் கடந்த 19ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடி பொலிஸாரைத் தாக்கியதில், நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐஸ் போதைப்பொருளைக் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும் இந்த நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




