அரசியல் நோக்கங்களுக்காக தன்னிச்சையான முறையில் முன்னெடுக்கப்படும் வைத்திய இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய,
எவ்வித முன்னறிவித்தலுமின்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோத முறையில் வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதற்கென விசேட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு நடவடிக்கை இதற்கு முன்னர் எப்போதும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த இடமாற்றங்கள் காரணமாக, நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த இடமாற்றங்களை நிறுத்துவதற்கு நாளை காலை வரை அரசாங்கத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் வேலைநிறுத்தம் உறுதிப்படுத்தப்படும்.
வேலைநிறுத்தத்தின் போதும் அவசர சிகிச்சை சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.




