திங்கட்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 42 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டியவில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, இந்த விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாகும். தற்போது சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சோள உற்பத்தி முட்டைத் தொழிலுக்குத் தேவையான அளவுக்கு போதுமானதாக இல்லை. சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றீடுகளைப் பயன்படுத்துவதால் கோழிகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதன் காரணமாக பெருமளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதுடன், இந்த நிலைமையினால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்திருந்த போதிலும், இதற்கான முறையான வேலைத்திட்டம் எதனையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றார்.





