“நீதித்துறை இன்னும் சீரழியவில்லை என்பதை அத்துகோரல கொலை வழக்குத் தீர்ப்பு நிரூபித்துள்ளது”!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, நாட்டு மக்கள் நீதிமன்றத்திடம் இருந்து எதிர்பார்த்த ஒரு நீதியான தீர்வாகும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பத்தரமுல்லவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மிகவும் அமைதியான உறுப்பினராகச் செயற்பட்ட அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புக்காக நீதித்துறைக்குத் தனது கௌரவத்தையும் நன்றியையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தீர்ப்பின் ஊடாக நாட்டில் சட்டம் இன்னும் சீரழியவில்லை என்ற வலுவான செய்தி சமூகத்திற்குச் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், வன்முறையைத் தூண்டியவர்களுக்கும் மிலேச்சத்தனமாகச் செயற்பட்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்று பாராளுமன்றம் மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகள் ஒரு கேலிக்கூத்தாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் மக்கள் எதிர்பார்த்த எவ்வித ஆக்கபூர்வமான மாற்றங்களும் நாட்டில் நிகழவில்லை எனத் தெரிவித்த அவர், நாட்டில் மீண்டும் இனவாதம் தூண்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

திருகோணமலை கஸ்ஸப தேரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டத்தின் கோட்டுக்கு மேலே யாரும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கூறினாலும், நடைமுறையில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக மட்டுமே சட்டம் கடுமையாகப் பாய்கிறது என்றும், அரசாங்கத் தரப்பினரின் ஊழல் மோசடிகள் குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் சாடினார்.

முன்னாள் தலைவர்கள் பாதுகாப்பு மற்றும் கால மேலாண்மைக்காக ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியபோது அதைக் கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று அதே வசதிகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சுதந்திர தினம் எவ்வித உத்வேகமும் இன்றி ‘உயிரற்ற’ ஒரு நிகழ்வாகவே நடத்தப்பட்டதாகவும், நாட்டின் கௌரவத்தைப் பறைசாற்றும் ரணவிருவர்களின் பெருமை அங்கு சிதைக்கப்பட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

தற்போதைய அரசாங்கம் வரை அரசியல் செய்வதை விடுத்து, உண்மையிலேயே மக்கள் செல்வாக்குடன் இருப்பதாக நம்பினால், ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள அதிருப்தியை அளவிட அதுவே சிறந்த சந்தர்ப்பம் என்றும் அவர் சவால் விடுத்தார்.